பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷத்தை கண்டு பிடிப்பது எப்படி? இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள்

ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும். நிழல் கிரகங்களான் ராகுவும், கேதுவும் நமது முன்வினைகளை பிரதிபலிப்பவை. மேலும் ராகு தந்தை வழி பாட்டனாரைக் குறிக்கும் கிரகம் ஆகும். அதே போல் கேது தாய் வழி பாட்டனாரைக் குறிக்கும கிரகம் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும், ஒருவர் செய்த முன்வினை கணக்கினை தெளிவாக காட்டுபவை ஆகும்.

ராகுவும், கேதுவும் அவரவர் முன்னோர்கள் செய்த பாவ-புண்ணிய கணக்கினை தெளிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த பாவங்களை தீர்க்க முடியுமா அல்லது முடியாதா என்பதையும் காட்டும் கிரகங்கள் ஆகும். ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு பாம்பு கிரகங்களே கிரகங்களில் மிகவும் வலிமையானவை. ஆனால் தற்கால சோதிடமோ ராகு மற்றும் கேது ஆகியவற்றிற்கு பலமில்லை என்று கூறுகின்றன். ராகுவை ஞான-போக காரகன் என்றும் கேதுவை மோட்ச காரகன் என்றும் அழைப்பர்.

முன்பு குறிப்பிட்டவாறு ஜாதகத்தில் ராகு, கேது அமைந்திருந்தால் ஜாதகரின் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை, குழந்தைப்பேறு இவற்றில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கான காரணம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களே. ஒருவர் தனது முற்பிறவிகளில் அவர் செய்த பாவங்களே அவருடைய இப்பிறவியில் ஜாதகத்தில் தோஷங்களாகவும், முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களே அவரது ஜாதகத்தில் யோகங்களாகவும் அமைகின்றன.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்களிடமிருந்து இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை பெறுவதால் நம் முன்னோர்களின் பாவ-புண்ணியங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி ஆகும். நாம் நமது முன்னோர்களின் பாவத்தினை அனுபவித்தால் நம் முன்னோர்களின் புண்ணியத்தினையும் அனுபவித்தே ஆக வேண்டும். நம் முன்னோர்களின் பாவமும் நம்முடைய பாவமும் சேர்ந்து தலைமுறை தலைமுறைகளாக நம்மை பின்தொடர்கின்றன என்பதே உண்மை ஆகும்.

அவ்வாறு நாம் பாவங்களை அனுபவிக்கும் காலத்தில் ஒரு சில நன்மைகளும் நமக்கு விளையும். அவை நம்முடைய புண்ணியம் மற்றும் நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தினால் விளையும் நன்மைகள் ஆகும். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முன்னோர்களின் பாவத்தினையும், நம்முடைய பாவத்தினையும் அழித்து நம் முன்னோர்கள் மற்றும் நம்முடைய ஆன்மாக்கள் நற்கதி அடையுமாறு செய்தல் வேண்டும். நமது பித்ருக்களின் ஆன்மா நற்கதி அடைய தக்க பரிகாரங்களை மேற்கொள்ளல் வேண்டும்.

இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள்:

கருச்சிதைவு செய்துகொண்டால் இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால் பித்ரு தோஷம் வரும்.

ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும்.தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது. சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல உள்ளன.

 

 http://tmpooja.com/shop/pooja-vastram-cotton-vastram/pooja-vastram-red/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *