ஏன் வில்வம் புனிதமானது?

வில்வம் – மிகவும் புனிதமாகக் கருதப்படும் இலைகளுள் ஒன்று. உலகில் பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் இருக்க, இந்த இலைக்கு மட்டும் ஏன் இந்த மதிப்பு? இது சிவனுக்கு அர்ப்பணிக்கப்படுவதாலா, இல்லை, இதன் இயற்கையான குணமே இதுதானா? தெரிந்து கொள்ளுங்கள் இக்கட்டுரையின் மூலம்…

சத்குரு:

ஏன், ஒரு இலை மற்றொன்றை விட புனிதமாக இருக்கிறது? இது ஒருவித பாரபட்சமா? அப்படி பார்த்தால், எல்லாமே மண்ணிலிருந்து தான் வருகிறது. வேப்பம் பழமும், மாம்பழமும் ஒரே மண்ணிலிருந்து வந்தாலும், சுவை வெவ்வேறாக இருக்கிறது அல்லவா? ஒரு குறிப்பிட்ட உயிர், ஒரு மண்ணை கையாளும் வழிமுறையும், இன்னொரு உயிர் அதே மண்ணை கையாளும் வழிமுறையும் வெவ்வேறாக இருக்கின்றன. ஒரு புழுவிற்கும், பூச்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன? உங்களுக்கும், மற்றொரு மனிதருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எல்லாமே ஒன்று தான், ஆனால் நாம் அவற்றிலிருந்து புரிந்து கொள்வது வேறுபடுகிறது.

ஆன்மீகத்தில் இருக்கும்போது…

மக்கள் ஆன்மீகப் பாதையில் இருக்கும்போது, அவர்கள் ஒவ்வொரு வழியிலும் உதவியை எதிர்பார்க்கிறார்கள், ஏனென்றால் இது யாரும் அறியாத பாதை. இந்திய கலாச்சாரத்தில், நமக்கு உதவியாக இருக்கும் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும், கூர்ந்து கவனித்தும், தியான நிலையில் இருந்தும் கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் பூக்களையும், பழங்களையும், இலைகளையும் கூட விட்டுவைக்கவில்லை.

ஏன் வில்வம் புனிதமானது?

ஏன் குறிப்பாக வில்வம் புனிதமாகக் கருதப்படுகிறது? எப்போதுமே வில்வம், சிவனுக்கு ரொம்ப நெருக்கம் என்று சொல்வார்கள். அவர் ஒன்றும் அப்படி கருதவில்லை. அது சிவனுக்கு நெருக்கம் என்று சொல்லமுடியாது. அது சிவனுக்கு நெருக்கம் என்று நாம் ஏன் நினைக்கிறோம் என்றால், அந்த வில்வத்தினுடைய அதிர்வுகள் நாம் சிவன் என்று கருதுவதுடன் இருக்கும் அதிர்வுகளுடன், பெருமளவிற்கு நெருக்கமாக இருக்கிறது.

வில்வத்தின் அதிர்வுகள்

இது மாதிரி நாம் நிறைய பொருட்களை கண்டுபிடித்து வைத்துள்ளோம். நாம் அவற்றை தான் அர்ப்பணம் செய்கிறோம். ஏனென்றால் அதன் மூலமாகத் தான் நாம், தெய்வீகத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். நீங்கள் வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிக்கும் போது, அதனை அவரிடம் விட்டு செல்வதில்லை. அதனை சிவனுக்கு அர்ப்பணம் செய்தபின், உங்களுடன் எடுத்து செல்கிறீர்கள். ஏனென்றால் வில்வத்திற்கு அந்த அதிர்வுகளைத் தக்க வைத்துக்கொள்ள கூடிய சக்தி, பெருமளவில் இருக்கிறது. நீங்கள் அதை லிங்கத்தின் மேல் வைத்து எடுத்தால், லிங்கத்தின் சக்தி அதிர்வுகள் நீண்டநேரம் அதில் இருக்கும். அதனை உங்களிடமே தக்க வைத்துக் கொள்ளலாம். நீங்கள் இதை செய்து பார்க்கலாம்: ஒரு வில்வ இலையை அர்ப்பணம் செய்து, உங்கள் சட்டை பையில் உங்களுக்கு மிக அருகில் அதை வைத்துக்கொண்டு நடந்து பாருங்கள். உங்களுக்கு, அது உடலளவிலும், மனதளவிலும், ஆரோக்கியத்திலும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதே மாதிரி பல பொருட்களை மக்கள் புனிதமாகக் கருதி உபயோகப்படுத்தி வருகிறார்கள். இது கடவுளைப் பற்றியது அல்ல. இது உங்களைப் பற்றியதும், நீங்கள் ஏதோ ஒன்றை அடையும் திறன் பற்றியதும் ஆகும்.

tm-pooja-villvam-tree-marketed-by-kalpatharu-inc.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *