காரடையான் நோன்பு எனும் சாவித்திரி விரதம்

காரடையான் நோன்பு பெண்களால் கடைப்பிடிக்கப்படும் விரத முறையாகும். இது வீரம் மற்றும் விவேகம் நிறைந்த சாவித்திரி என்ற பெண்ணால் தன் கணவனின் உயிரைக் காப்பாற்ற வேண்டி முதலில் கடைப்பிடிக்கப்பட்டு அதன்பின் வழிவழியாக இன்றளவும் பெண்களால் பின்பற்றப்படுகிறது.

இவ்விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கவுரி விரதம் என்று பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இவ்விரத வழிபாட்டின் போது கார்காலத்தில் விளைந்த நெல்லினைக் கொண்டு அடை செய்து சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது.

இவ்வழிபாட்டில் கவுரி ஆகிய காமாட்சி அம்மனை வைத்து வழிபடுவதால் கவுரி விரதம், காமாட்சி விரதம் என்றும், சாவித்திரி வழிபட்டதால் சாவித்திரி விரதம் என்றும் இவ்விரத முறை அழைக்கப்படுகிறது.

இவ்விரத வழிபாடானது மாசி மாதம் கடைசி நாள் இரவு தொடங்கப்பட்டு பங்குனி மாதம் முதல் நாள் நிறைவு பெறுகிறது.

வழிபாட்டின் முடிவில் வழிபாட்டில் இடம் பெற்ற நோன்பு கயிறு பெண்களால் அணியப்படுவது குறிப்பிடத் தக்கது.

இவ்விரதம் மேற்கொள்வதால் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிப்பதோடு அவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வினை அம்மன் வழங்குவதாக் கருதுகின்றனர்.

காமாட்சி அம்மன் பின் பற்றிய விரதம்

ஒரு முறை உமையம்மை சிவனின் கண்களை விளையாட்டாக பொத்தியதால் உலகம் இருண்டது. தன் தவறுக்கு வருந்திய தேவி கம்பை ஆற்றின் கரையில் மணலால் லிங்கம் வடித்து வழிபாடு நடத்தி வந்தாள்.

ஒரு நாள் கம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டபோது சிவலிங்கம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இருக்க விரதமுறையைப் பின்பற்றினாள்.

அதில் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்கு காட்சி கொடுத்து திருமணம் செய்து கொண்டு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அருளினார்.

காமாட்சி அம்மன் பின்பற்றிய விரதமுறையை சாவித்திரிக்கு கூறி சாவித்திரியை பின்பற்றி தீர்க்க சுமங்கலி வரத்தினைப் பெறுமாறு நாரதர் அறிவுறுத்தியதால் இவ்வழிபாட்டில் காமாட்சி அம்மன் இடம் பெறுகிறாள்.

காரடையான் நோன்பு மேற்கொள்ளும் முறை

இவ்விரத நாளன்று பெண்கள் நித்திய கடன்கள் முடித்து நீராடி பூஜை அறையை அலங்கரிக்கின்றனர்.

காமாட்சி அம்மன் படத்தினையோ, தேங்காய் வைத்த கலசத்தினையோ வழிபாட்டில் இடம் பெறச் செய்கின்றர்.

மஞ்சள் அல்லது பூக்களைக் கட்டிய நோன்புக் கயிறுகளை வழிபாட்டில் வைக்கின்றனர்.

இலையில் கார்காலத்தில் விளைந்த நெல்லிருந்து கிடைத்த அரிசி மற்றும் காராமணியைக் கொண்டு தயார் செய்தஉப்பு  மற்றும் வெல்ல அடைளையும், உருகாத வெண்ணையையும் படைத்து விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர்.

வழிபாட்டின் போது ‘உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்றேன். மறுக்காமல் நீ எனக்கு மாங்கல்யப் பாக்கியம் தா’ என வேண்டிக் கொண்டு காமாட்சி அம்மன் படத்திற்கு ஒரு நோன்பு கயிற்றினை சாற்றிவிட்டு பெண்கள் தங்கள் கழுத்தில் நோன்புக் கயிற்றினைக் கட்டிக் கொள்கின்றனர்.

வழிபாட்டின் முடிவில் அடைகளை பிரசாதமாக உண்டு வழிபாட்டினை நிறைவு செய்கின்றனர்.

காரடையான் நோன்பின் பலன்

இவ்விரத முறையை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பின்பற்றுவதால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து பாசமும் நேசமும், அன்னோன்னியமும் அதிகரிக்கும்.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவர். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நிறைவான திருமண வாழ்வு கிடைக்கும். எல்லாவித செல்வங்களுடன் நிறைவான வாழ்கை பெண்களுக்கு கிடைக்கும்.

காரடையான் நோன்பு மேற்கொண்டு சாவித்திரி வீரம், பக்தி, விவேகம், பொறுமை, திடநம்பிக்கை ஆகியவற்றுடன் எமதர்மனிடம் போராடி தனது கணவனின் உயிரினைத் திரும்பப் பெற்றாள்.

அதேபோல் நாமும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இவ்விரத வழிபாட்டினை மேற்கொண்டு வாழ்க்கையின் இன்னல்களை வென்று வசந்தமாக்குவோம்.

Almond & Honey Soap

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *