மூலாதாரம் பற்றி சித்தர் போகர்

ஆறு ஆதாரங்களில் ஒன்றான மூலாதாரம்,முதுகு தண்டுக்கு கீழ் உள்ளது. அதன் அமைப்பை போகர் சித்தர் தனது போகர் 7000 என்ற நூலில் இப்படி கூறுகிறார்.

போகர் 7000காணவே மூலம் அஃது அண்டம் போலக்
காரணமாய்த் திரிகோண மாக நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளைய மாகும்
புறம்பாக இதழ் அதுவும் நாலுமாகும்
நாணவே நாற்கமலத்து அட்சரங்கள்
நலமான வ-ச-ஷ-ஸவ்வு மாகும்
மூணவே மூக்கோணத்து உள்ஒளி ஓங்கார
முயற்சியாய் அதற்குள்ளே அகாரம் ஆமே
– போகர் 7000

மூலாதாரமானது ஒரு வட்டம் போல் இருக்குமாம் அதன் நடுவில் முக்கோணம் ஒன்று இருக்குமாம் அதன் மேலே ஒரு வளையமும், அதனை சுற்றிலும் நான்கு இதழ்களும் இருக்குமாம். அந்த இதழ்களில் வ-ச-ஷ-ஸ என்ற நான்கு எழுத்துக்கள் இருக்குமாம். அதன் ஒரு புறத்தில் ‘உ’ காரமும் மறுபுறத்தில் ‘அ’ காரமும் இருக்குமாம்.

அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பர்
அதிலே ஓர் கோணத்தில் உகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள்
ஒடுங்கியதோர் முனை ஒன்றில் கதவிப் பூவாய்ப்
புகாரமாய் முகங்கீழ்க்குண் டலியாம் சக்தி
பெண்பாம்பு போல் சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய் சுழிமுனை ஊடுருவி நிற்பாள்
துரியாதீதம் என்ற அவத்தை தானே.
– போகர் 7000

அகாரத்தில் மேலே கணேசர் நிற்பாராம் அதன் மற்றொரு புறமான உகாரத்தின் மேல் வல்லபை என்ற சக்தி நிற்பாளாம் இதில் வாழைப் பூவை போல் கீழ்நோக்கி ஒன்று விரிந்திருக்கும். அதில் பெண் பாம்பு போல் குண்டலினி சக்தி சுருட்டிக் கொண்டு சுழிமுனையில் ஊடுருவி சீறிக் கொண்டு இருப்பாளாம்

அவத்தைதனக் கிருப்பிடம்மும் மூலமாகும்
அழகான கதலிப்பூ எட்டி தழாய் நிற்கும்
நவத்தைக்கு நந்தி அதன் வாயில் நிற்பார்
நற்சிவமரம் சிகார மல்லோ கோடி பானு
அவத்தைக்கு வாய் திறவாள் மலரால் மூடும்
மைந்தனே எட்டு இதழில் எட்டு சத்தி
பவத்தைக்குச் சக்தி எட்டின் பேர் ஏது என்றால்
பாங்கான அணிமவும் லகிமாத் தானே
– போகர் 7000

இதுவே மூலதாரத்தின் இருப்பிடமாகுமாம் முக்கோணத்தின் கீழ் முனையில் உள்ள வாழைப் பூ போன்ற அமைப்பு எட்டு இதழ்களை கொண்டது. அந்த எட்டு இதழ்கள் ஒவ்வொன்றிலும் எட்டு விதாமான சக்திகள்அடங்கிஇருக்குமாம் அதன் நடுவே நந்தி நிற்பாராம். நந்திக்கு பிறகு கோடி சூரிய பிரகாசத்துடன் நற்சிவமும் இருக்குமாம்.

தானான மகிவாவும் கரிமா வோடு
தங்கும்ஈ சத்துவமும் வசித்து வமாகும்.
பூனான பிராத்திபிரா காம்யத் தோடு
புகழ்எட்டுத் தேவதையும் தளத்தில் நின்றே
ஏனான இதழாலே மூடிக் கொள்வார்
ஏற்றமாம் நந்தியைத் தான் காணொட்டாமல்
– போகர் 7000

அந்த எட்டு சக்திகள், அணிமா, லகிமா, மகிமா, கலிமா, ஈசத்துவம்,வசித்துவம்,பிராப்தி மற்றும் பிராகாமியம்மாகும் அந்த அட்டமா சக்திகளுக்கான தேவர்கள் அங்கு நின்று நந்தியை பார்க்க விடாமால் எட்டு இதழ்களால் மூடிக் கொள்வார்களாம். இதுவே மூலாதாரத்தின் அமைப்பாக போகர் சித்தர் கூறுகிறார்.

மூலாதாரத்தை விழிக்கச் செய்ய சித்தர் போகர் கூறுவது
போகர் 7000

மூலாதாரத்தை எப்படி விழிக்கச்செய்வது என்று போகர் கூறியிருக்கிறார் இந்த பதிவில் அதை பார்ப்போம். இதில் எனக்கு எந்த அனுபவமும் கிடையாது நான் படித்ததை பகிர்கிறேன். இந்த நிலைகளை அடைவது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல.

வானான வஸ்துவைநீ பானம் பண்ணி
வங்ஙென்று வாங்கியுமே கும்பித்தூதே
– போகர் 7000 – 14

வஸ்துவை பானம் பண்ணி வங்கென்று கும்பித்து மூச்சை மேலும் செலுத்து

ஊதினால்என் வாசத்து இலகி ரியாலே
உலாவுவார் இதழ் எல்லாம் திறந்து விட்டுப்
போதினால் ஆயிசொன்ன ஏவல் கேட்பார்
புகுந்து பார் நந்தி கண்டால் யோகமாகும்
வாதினால் பத்தான வருடத் துக்கும்
வாசலையே திறவாமல் மூடிக் கொள்வார்
ஏதினால் இதற்குள்ளே வாசி மாட்டே
இடத்தோடில் வங்ஙென்ன உள்ளே வாங்கே –
போகர் 7000 – 15

அப்படி ஊதினால் எட்டு சக்திகளும் இதழ்களை திறந்துவிடுமாம். அந்த எட்டு சக்திக்கான தேவர்கள் வெளியே வந்து உலாவுவார்கள் என்கிறார். நம் ஏவல்களையும் செய்வார்கள் என்று சொல்கிறார். எட்டு இதழ்களையும் திறந்தவுடன் நந்தி தெரிவாராம். அவரை கண்டதும் யோகம் வாய்க்கும் என்கிறார். இது நிகழவேண்டும் என்றால் இடைவிடாமல் சாதகம் செய்ய வேண்டும் பத்து வருடங்கள் கூட செய்ய வேண்டியது வருமாம்.பின் இடது நாசியில் வங் என்று மூச்சை வாங்கு.

வாங்கியே நந்தி தனில் யங்ஙென்று கும்பி
வலத்தோடில் சிங்ஙென்று உள்ளாக வாங்கித்
தாங்கியே யங்ஙென்று இருத்திக் கும்பி
தளமான தெருவாறும் வெளியாய்க் காணும்
ஓங்கியே மாணிக்க ஒளிபோல் தோன்றும்
உத்தமனே மூலத்தின் உண்மை காணும்
தேங்கியே வல்லபையாம் சத்தி தாணும்
சிறந்திருப்பாள் பச்சைநிற மாகத் தானே –
போகர் 7000 – 16

முச்சை உள்வாங்கி நந்தியை நினைத்து யங் என்று கும்பித்துப்பார் வலுது நாசியில் மூச்சை விடும்போது சிங் என்று மூச்சை உள்ளே வாங்கி யங் என்று மூச்சை கும்பிப்பாயாக (கும்பகம் – சிறிது நேரம் மூச்சை நிறுத்துவது) . இப்படி செய்யும்போது ஆறு ஆதாரங்களுக்கும் வழித்தோன்றுமாம். மாணிக்க ஒளிப்போல் தோன்றுமாம் மூலத்தின் உணமையும் தெரியுமாம். பச்சை நிறமாக வலை தாய் சக்தி காட்சித்தருவாள் என்கிறார்.

பச்சைநிற வல்லபையைப் பணிந்து போற்று
பாங்கான ஆறுக்கும் பருவம் சொல்வாள்
மொச்சையாம் மூலமது சித்தி ஆனால்
மூவுலகும் சஞ்சரித்துத் திரிய வாகும்
கச்சைநிறக் காயமுமே கனிந்து மின்னும்
கசடு அகன்றே ஆறுதலங்கண்ணில் தோன்றும்
துச்சைநிற வாதம்சொன் னபடி கேட்கும்
துரியததின் சூட்சம் எல்லாம் தோன்றும் பாரே.
– போகர் 7000 – 17

பச்சை நிற வாலை தாயை பணிந்து போற்று, ஆறு ஆதாரங்களையும் கடப்பதற்கு உரிய காலத்தை உனக்கு உணர்த்துவாள் என்கிறார். மூலம் என்ற முதல் படி சித்தியாகி விட்டாலே மூவலகங்களிலும் சென்று திரியலாம் என்கிறார். உடல் கனிந்து மின்னுமாம். உடலில் படிந்துள்ள அனைத்து அழுக்குகளும் அகன்று ஆறு ஆதாரங்களும் கண்களுக்கு காட்சியளிக்கும் என்கிறார். துரியத்தின் சூட்சமம் எல்லாம் தெரியும் எனகிறார். தூரியம் என்பது தலை உச்சியில் உள்ள ஓம் சக்கரம்.

 

மூச்சுபயிற்சி மூலமாக மூலாதாரத்தை விழிக்க செய்யும் முறையை இங்கு போகர் கூறுகிறார். நல்ல குருவை தேர்ந்தெடுத்து அதாவது இந்த மூச்சுபயிற்சியில் நன்கு தேர்ந்தவர்களின் மூலம் கற்று கொள்வதே சிறந்தது. மூச்சுபயிற்சி செய்பவர்கள் அனைவருக்கும் இது வாய்க்கும் என்றும் சொல்லமுடியாது ஆனால் உங்கள் உடல் நல்ல ஆரோக்கியம் அடையும். ஒழுக்கத்துடனும் தன்நலம் இன்றி வாழ்பவர்களுக்கு இது கண்டிப்பாக வாய்க்கும்.

 

Visit : tmpooja.com/info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *