சபரி மலையிலும், மற்ற சில கோயில்களிலும் தேங்காயை உருட்டிச் சென்று வழிபடும் முறை உள்ளது.
தேங்காய் என்பது ஒரு மிகப்பெரிய சக்தி. தேங்காய், எலுமிச்சைப் பழம், பூசணிக்காய் போன்றவை பலி கொடுக்கக்கூடிய பொருட்கள். உயிருள்ளவைகளைதான் நாம் பலிகொடுக்க முடியும். அதனால்தான் எலுமிச்சை கனியை புதிய வாகனத்தினுடைய சக்கரத்தில் வைத்து பலி கொடுப்போம். அதேபோல பூசணிக்காயையும் பலி கொடுப்போம்.
தேங்காய்க்கு வேண்டுதல்கள், நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் இதையெல்லாம் உள்வாங்கக்கூடிய சக்தி உண்டு. அதனால்தான் பிரம்மதூபமாக தேங்காயைப் பார்க்கிறார்கள். சில நூல்கள் பிரம்மனுடைய அம்சம் என்று தேங்காயைச் சொல்கிறது.
பிரம்மனுக்கு முக்கண், அதாவது மூன்று கண் இருப்பது போல, தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருக்கிறது. பெரிய பெரிய தோஷங்களெல்லாம் நீங்க வேண்டுமென்றால் தேங்காயை உடைத்து கண் இருக்கும் முடியில் நெய்யோ அல்லது நல்லெண்ணெயோ விட்டு அதில் திரி போட்டு ஏற்றினால் பெரிய பெரிய தோஷங்கள் எல்லாம் நீங்கும் என்று சில நூல்கள் சொல்கிறது.