இறைவனுக்குச் செய்யும் பூசை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகையாம் என்பார்கள். பரார்த்தம் என்பது, தன்னைத் தவிற ஏனைய உயிர்களின் நன்மைக்காகச் செய்யப்படுவது.
அர்ச்சகர்கள் பரார்த்த பூசை என்கிற வகையில் பக்தர்களுடைய நலனுக்காக, அருச்சனை, அபிடேகம்(முழுக்காட்டு) முதலியவை செய்தாலும், பிரபஞ்சங்களை எல்லாம் காத்தருளுகின்ற எம்பெருமான் ஆன்மாக்களின் நன்மைக்காக இதைச் செய்கிறான் என்று அன்பு உணர்வுடன் அவர்கள்செய்யும் போது இறைவன் ஏற்றுக் கொள்கிறான். பலன்களையும் தருகிறான்.
ஆனால் பூசை என்பது ஒரு சம்பிரதாயமாகிவிட்டதை நாம் காண்கிறோம். திருக்கோயில்களில் பக்தர்களுடைய கூட்டம் அலை மோதுவதால், அர்ச்சகர்கள் வெறும் இயந்திரங்கள் ஆகிவிடுகிறார்கள். அன்பு காட்ட நேரம் கிடைப்பது இல்லை. செய்யும் பூசையையும் முழுமையாக செய்ய இயலாது. நாம் எந்த பூஜையிலும், அன்புடன் செய்யும் அறிவு வேண்டும் என்கிறார் திருமூலர்.
பயன் அறி ஒன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்கு அரன்தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடையான் அடிசேர
வயனங்களால் என்றும் வந்து நின்றானே.
நம்முடைய வீடுகளில் கூட, அழகான பூஜை அறை அமைத்திருப்போம். வருகிறவர்களுக்கெல்லாம் பெருமையாக காண்பிப்போம். ஆனால் பூஜை செய்வதற்கு நமக்கு நேரம் இருக்காது. காலையில் வேலைக்குக் கிளம்பும்போது, அவசரம் அவசரமாக பூக்களைத் தூவி விட்டுச் செல்வோம். அன்பு உள்ளத்தில் இருந்தால் போதுமென்ற நினைப்பு! உள்ளத்தில் இருந்தால் மட்டும் போதாது. நமது செய்கையில், தொண்டில், வழிபாட்டுமுறையில் அன்பு வெளிப்பட வேண்டும்.