வீட்டில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும். இந்த பழக்கம் வீட்டை லட்சுமி கடாட்சமாக திகழச் செய்யும். அதிகாலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக ‘பிரம்ம முகூர்த்தம்’ எனப்படும் ஆதி அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த வழிபாட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம். அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.
விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும். வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன்-மனைவி உறவு நலம் பெற வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.
குல தெய்வத்தின் முழு அருளை பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம். நல்லெண்ணெய் தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.
மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட விரும்புபவர்கள் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம்.
சர்வ தேவதைகளுக்கும் நல்லெண்ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.
கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், செம்பனை எண்ணெய் போன்றவற்றை கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது.
கிழக்கு- திசை நோக்கி தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும்.
மேற்கு- திசை நோக்கி தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும். வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும். தெற்கு திசை நோக்கி ஒரு போதும் தீபம் ஏற்றக்கூடாது